Thursday, July 9, 2015

பிரம்ம தேஜோ பலம் பலம் - மும்மூர்த்திகளின்அருளையும் பெற


தானத்தில் சிறந்தது அன்னதானம். திதிகளில் சிறந்தது துவாதசி திதி. மாதங்களில் சிறந்தது மார்கழி. அதுபோல் மந்திரங்களில் சிறந்தது காயத்ரி  என்பார்கள். கிருஷ்ண பரமாத்மாவும் கீதையில், "மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன்' என்கிறார்.

கௌசிகன் எனும் மன்னன் தம் தவப்பயனால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்று விஸ்வாமித்திரர் என்று எல்லாராலும் அழைக்கப்பட்டார். இவரே வரப்பிரசாதமான காயத்ரி மந்திரத்தை நமக்களித்தவர். பிரம்மாஸ்திரம் எனும் இணையற்ற அஸ்திரத்திற்கு காயத்ரி மந்திரமே ஆதாரம். இதை "பிரம்ம தேஜோ பலம் பலம்' எனக் குறிப்பிடுகிறார் விஸ்வாமித்திரர். மகிமைவாய்ந்த இந்த காயத்ரி மந்திரத்தின் அதிதேவதை காயத்ரி தேவி. 

ஒருமுறை பிரம்மன் புஷ்கரம் என்னும் புண்ணிய க்ஷேத்திரத்தில் ஒரு யாகத்தைத் தொடங்கினார். அந்த யாகத்தில் பங்கேற்க சரஸ்வதி தேவி வராததால், நான்முகன் தனதுசக்தியால் ஸ்ரீகாயத்ரி தேவியை சிருஷ்டித்தார். காயத்ரியே சரஸ்வதியாக எழுந்தருளினாள். பிரம்மனும் தன் யாகத்தை முடித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.

இந்த தேவி செம் பருத்திப்பூ போன்ற சிவந்த நிறம் கொண்டவள். செந்தாமரையில் எழுந்தரு ளும் அன்னையான இவள் ஐந்து திருமுகங்களும், பத்து திருக்கரங்களும் கொண்டு திகழ்கிறாள். 

காயத்ரி தேவி தன் பத்து கைகளில் வர ஹஸ்தம், அபய ஹஸ்தம், அங்குசம், சாட்டை (உட்புறமும் வெளிப்புறமும் உள்ள தீயசக்திகளை நீக்குவது)கபாலம் (சிவ தத்துவம்), கதை (விஷ்ணு தத்துவம்), சங்கு, சக்கரம், இரண்டு கைகளில் தாமரை ஏந்தியவள்; நான்கு வேதங்களையும் நான்கு திருப்பாதங்களாகக் கொண்டவள் என சாஸ்திரங்கள் போற்றுகின்றன. வேதத்தின் மூலாதாரமாக காயத்ரி மந்திரம் திகழ்கிறது.

காயத்ரி என்கிற பதம் காய்+ த்ரீ எனப் பிரிந்து பொருள் தரும். அதாவது "காய்' என்றால் கானத்திற்கு உரியது. பாடப்பெறுவது எனப் பொருள் கொள்ளலாம். காயத்ரி மந்திரத்தை தாளம் தப்பாமல் கூறி தியானித்தால் பெரும் பலன் உண்டு.

"த்ரீ' என்பது "த்ராயதே' என்று  விரிந்து "காப்பாற்று' எனப் பொருள்படும். அன்னை காயத்ரி தனது அபய கரங்களால் நமது பயத்தைப் போக்கியருள்வாள்.

கா+ ய+ ஆ+ த்ரீ எனும் நான்கு எழுத்துக்களின் சேர்க்கைதான் காயத்ரி. இதில் கா- என்பது நீர் தத்துவமாகிய கண்களுக்குப் புலப்படும் ஸ்தூலத்தைக் குறிப்பது. இதற்கு அதிபதி பிரம்மன். ய- என்பது வாயு தத்துவமாகிய சூட்சுமத்தைக் குறிப்பது. இதற்கு அதிதேவதை விஷ்ணு. 

ஆ- என்பது காரணதேகம். இதன் அதிபதி ருத்ரர். த்ரீ- எனும் பதம் இம்மூவரும் சேர்ந்து நம்மைக் காப்பாற்றியருள்வர் என்பதைக் குறிக்கும். 

எனவே ஒருமுகப்பட்ட மனத்தோடு காயத்ரி மந்திரம் சொல்லி வழிபட மும்மூர்த்திகளின்அருளையும் பெறலாம்

"ஓம் பூர்புவஸ் ஸுவ: தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ
தேவஸ்ய தீமஹி தியோயோன: ப்ரசோதயாத்.'

இதுவே காயத்ரி மந்திரம். "எவர் நமது அறிவைத் தூண்டி பிரகாசிக்கச் செய்கிறாரோ, அந்த ஜோதிமயமான இறைவனை தியானிப்போமாக' என்பதே இம்மந்திரத்தின் பொருளாகும். 

எல்லா தெய்வங்களுக்கும் காயத்ரி மந்திரம் பிரார்த்தனை மற்றும் தியான சுலோகமாக உள்ளது. எல்லா காயத்ரி மந்திரங்களுக்கும் பொதுவாக அமைந்தது மேற்கண்ட பிரம்ம காயத்ரியாகும். இதுதவிர மற்ற தெய்வங்களுக்குரிய நூற்றுக்கும் மேற்பட்ட காயத்ரி மந்திர சுலோகங்களும் உண்டு.



காயத்ரி மந்திர நியதிகளும் பலன்களும்


காயத்ரி மந்திரத்தைப் பொருள்புரிந்து குருமுகமாக உபதேசம் பெற்று ஜெபிக்க வேண்டும்.

இந்த மந்திரத்தை ஜெபம் செய்யும்போது காயத்ரி தேவியையும், சூரிய பகவானையும், ஸ்ரீமந் நாராயணனையும் தியானித்து பக்தி சிரத்தையோடு ஜெபம் செய்யவேண்டும். இதனால் மனோபலமும் வசீகர சக்தியும் கூடும். 

காயத்ரி மந்திரத்துக்கு ஆத்ம சுத்தி, சரீர சுத்தி மிக அவசியம். ஜெபம் செய்வதற்கான இடம், சுத்தமும் காற்றோட்டமும் வெளிச் சமும் உள்ள இடமாகத் திகழ்தல் வேண்டும்.

நதிக்கரைகள், திருக்குளங்கள், அமைதியான மலைப்பிரதேசங்கள், மகான் களின் அதிஷ்டானம், திவ்யதேசங்கள் போன்ற இடங்களில் அமர்ந்து தியானித்தால் கூடுதல் பலன் உண்டு.

பசு மடத்தில் அமர்ந்து இம்மந்திரத்தை தியானித்தால் அசுவமேத யாகம் செய்த பலன் உண்டாகும். அதுபோன்று கோவில் கும்பாபிஷேக காலத்தில் யாக சாலையில் அமர்ந்து ஜெபம் செய்தால் பலகோடி நன்மைகள் பெறலாம்.

மான்தோலில் அமர்ந்து இம்மந்திரத்தை தியானித்தால் மன அமைதியும் ஞானமும் பெருகும். துளசி, பவழ மாலை, பொன்மணி மாலை, ருத்ராட்ச மாலை ஆகியவற்றை ஜெபம் செய்ய எடுத்துக்கொள்ளலாம்.

சூரியோதயத்திற்கு முன்பிருந்து சூரியன் மறையும் காலம்வரை எப்போதும் இம்மந்திரத்தை ஜெபிக்கலாம். வைகறை யிலும், அந்தி வேளையிலும் செய்வது உத்தமம். இரவு வேளைகளில் மானசீகமாக ஜெபிக்கலாம்.

காலையில் கிழக்கு நோக்கியும், மாலையில் மேற்கு நோக்கியவாறும் காயத்ரி மந்திரத்தை ஜெபிக்கலாம். எரிகின்ற தீபத்தைப் பார்த்தோ, அம்பாள் படத்தைப் பார்த்தவாறோ ஜெபித்தால் கூடுதல் பலனைப் பெறலாம். ஜெபம் செய்யும்போது இடையில் எழுந்து செல்லும் நிர்ப்பந்தம் ஏற்பட்டால், மீண்டும் கை, கால்களைச் சுத்தம் செய்துவிட்டுஜெபத்தைத் தொடர்ந்து செய்யலாம்.

காயத்ரி மந்திரத்தின் அட்சரங்கள்


காயத்ரி மந்திரத்தில் 24 அட்சரங்கள் உள்ளன. அவையனைத்தும் 24 ரிஷிகள், 24 தேவதைகள், 24 பலன்களைக் குறிக்கும். 24 பாவங்களையும் நீக்கும். 24 அட்சரங்களை 3 வேதத்திற்குரியவாறு பிரித்துள்ளனர். 

காயத்ரி மந்திரம் பற்றி பலருக்கும் தெரிந்திருந்தாலும், அந்த மகத்தான மந்திரத்தின் பின்னணியில் உள்ள காயத்ரி தேவதை பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். காயத்ரி மந்திரம் ரிக்வேதத் திலுள்ள ஆயிரக்கணக்கான மந்திரங்களில் ஒன்றுதான் என்றாலும், 24 எழுத்துக் களைக் கொண்ட காயத்ரி மந்திரம் வேத மந்திரங்களின் சாராம்சமாகக் கருதப் படுகிறது. தன்னை ஜெபிக்கின்றவர் களுக்குப் பாதுகாப்பளித்து ஓர் அரணாகத் திகழ்வதால் காயத்ரி மந்திரத்திற்கு அப் பெயர் ஏற்பட்டது.

சந்தஸ் அமைப்பிலுள்ள காயத்ரி மந்திரத்தையே வேத மாதாவாக நாம் போற்றுகிறோம். காயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவிகளுமே  காயத்ரி மந்திரத்தின் அதிதேவதையாகக் கருதப்படுகின்றனர். காயத்ரி தேவி காலை சந்தியாவந்தனத்தின்போது அதி தேவதையாகவும், ரிக்வேத ரூபிணியாகவும், மூன்று அக்னிகளில் கார்ஹபத்ய அக்னியாகவும் வணங்கப்படுகிறாள். நண்பகலில் யஜுர் வேத சொரூபிணியான சாவித்ரியாகவும்,  மாலை வேளையில் சரஸ்வதி தேவி, சாமவேதத்தின் தேவதையாக, ஆவஹணீய அக்னியாகப் போற்றப்படுகிறாள்.

ஐந்து தலைகளோடும், பத்து கைகளோடும் தாமரை அல்லது அன்ன வாகனத்தின்மீது ஆரோகணித்திருக்கும் காயத்ரிதேவி பிரம்மாவின் மனைவி என்பதால், தன்னுடைய ஒரு முகத்தோடு, பிரம்மாவின் நான்கு முகங்களையும் கொண்டுள்ளதாக ஐதீகம். காயத்ரி தேவியின் ஐந்து முகங்களும் சிவபெருமான் நிகழ்த்துகின்ற சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், திரோதனம், அனுக்ரஹம் (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) என்ற ஐந்து செயல்களை நினைவூட்டும் வகையில், சரஸ்வதி, லஷ்மி, பார்வதி, மஹேஸ்வரி, மனோன்மணி என்ற தேவதைகளின் ஐந்து முகங்களைக் குறிப் பிடுவதாகவும் கருதப்படுகிறது. ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்களோடு தேவி சித்தரிக்கப்படுகிறாள்.

படைப்புக் கடவுளான பிரம்மாவின் தேவியான சரஸ்வதி, காக்கும் கடவுளான  ஸ்ரீமகாவிஷ்ணுவின் தேவியான மகாலட்சுமி, அழிக்கும் கடவுளான சிவபெருமானின் தேவியான பார்வதி ஆகிய மூவரும் ஓருருவமாக- காயத்ரி தேவியாக விளங்கி நமக்கு ஞானத்தையும் வைராக்கியத்தையும் அருளுகிறார்கள். ஐந்து தேவதைகளைக் குறிக்கின்ற வகையில் சிவப்பு, முத்து நிறம், மஞ்சள், நீலம், வெண்மை ஆகிய நிறங்களில் காயத்ரி தேவியின் ஐந்து முகங்கள் பிரகாசிக்கின்றன. காயத்ரி தேவியின் இருபுறங்களிலும் மகாலட்சுமியும் சரஸ்வதியும் அமர்ந்திருப்பதுபோலக் காட்டப்படுவதுண்டு.

வால்மீகி முனிவர், காயத்ரி மந்திரத்திலுள்ள 24 எழுத்துகளில் ஒவ்வொரு எழுத்திற்கும் ஆயிரம் ஸ்லோகமாக 24,000 ஸ்லோகங்களைக் கொண்டு தனது இராமாயணத்தை இயற்றியுள் ளார். 12 ஸ்காந்தங்கள், 318 அத்தியாயங்கள், 18,000 சுலோகங்களையும் கொண்ட மிகச்சிறந்த புராணம் ஸ்ரீதேவி பாகவதம். வியாச முனிவரால் தனது புதல்வர் சுகருக்கு உபதேசிக்கப்பட்டு, சனகாதி முனிவர்களுக்கு சூதரால் கூறப்பட்ட பெருமையுடைய இந்த தேவி பாகவதத்தில் 12-ஆவது ஸ்காந்தத்தில் 51 மற்றும் 52-ஆவது அத்தியாயங்களாக அமைந்திருப்பவைதான் காயத்ரி மஹாத்மியமும், காயத்ரி ஸஹஸ்ர நாமமும். நாரத முனிவருக்கு நாராயண ரிஷியால் இவை உபதேசிக்கப்பட்டன. காயத்ரி மஹாத்மியத்தில் 24 சுலோகங்களைக் கொண்ட காயத்ரி  ஸ்தோத்திரம் அடங்கியுள்ளது. காயத்ரீ தேவி விஷ்ணுலோகத்தில் ஸ்ரீமஹாலட்சுமியாக வும், பிரம்ம லோகத்தில் காயத்ரியாகவும், ருத்ர லோகத்தில் கௌரி என்ற பார்வதியாகவும் விளங்குவதாக இது குறிப்பிடுகிறது.

காயத்ரி மந்திரத்தை இடைவிடாது நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஜெபம் செய்து அலைபாய்கின்ற மனத்தை ஒருமுகப்படுத்தி சாதனை படைத்தவர்கள் பலர். அறிவுக்கூர்மை பெறவும், ஞாபக சக்தி வளரவும், அச்ச உணர்வு அகலவும், எதிலும் வெற்றி பெறவும், விவேகம் ஏற்படவும் கைகண்ட மருந்தாக காயத்ரி மந்திரம் பயன்படுகிறது.

"காயத்ரியைக் காட்டிலும் சிறந்த மந்திர மில்லை; தாயை மிஞ்சிய தெய்வம் இல்லை; காசியைவிட புண்ணிய தீர்த்தமில்லை; ஏகாதசியை விஞ்சிய வேறு விரதமில்லை' என்கிறது ஒரு சுலோகம்.

ஒவ்வோர் ஆண்டும் ஆவணி அவிட்டத்திற்கு மறுநாள் காயத்ரி ஜெபம் வரும். அன்றைய தினம் 1,008 முறை காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டுமென்பது மரபு.

அன்றாடம் சந்தியாவந்தனத்தின் போதெல் லாம் முடிந்த அளவுக்கு காயத்ரி ஜெபம் செய்வது விசேஷமானதாகும்.

No comments:

Post a Comment