Friday, June 5, 2015

விடிகாலையில் எழவேண்டிய அவசியம்

விடிகாலையில் எழவேண்டிய அவசியம் சிலபேருக்கு எப்போதாவது ஏற்படுவது உண்டு!
பஸ், அல்லது ரெயிலை பிடிக்க, முடிக்கவேண்டிய கடமைகளை முடிப்பதற்கு, அதிகாலையில் பரீட்சைக்கு அவசரமாக படிப்பதற்கு, உறவினர்களின் விசேடங்களில் கலந்துகொள்வதற்கு, கோவில் திருவிழாக்களில் கலந்துகொள்ள, நண்பர்களை போய் வழியனுப்பி விட என ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு காரணங்கள் இருக்கும்.
இவற்றில் பெரும்பாலானவை மறுபடியும் வாய்க்காத சந்தர்ப்பங்களாகவே இருக்கும். கை விட்டால் கைவிட்டதுதான்.
அலாரம் வைத்து எழ முயல்பவர்கள் மேஜைக்கடிகாரத்தை ஏதோ தமது குழந்தைகள்போல பக்கத்தில் வைத்துக்கொண்டு தூங்குவார்கள். இது மகா தவறு!!
அலாரம் குறித்த நேரத்தினுள் அடிக்க தொடங்கியதும் ஏதோ எங்களை கடிக்க வந்த கொசுவை அடிப்பதுபோல அதன் தலையில், அல்லது பொத்தானில் அடித்துவிட்டு மீண்டும் தூங்குபவர்களே நூற்றுக்கு தொண்ணூறு வீதத்தினர்.
அலாரம் என்பது படுக்கையில் இருந்து சிறிது தூரத்தில் எழுந்து சென்று நிறுத்தக்கூடிய அளவில் இருக்கவேண்டும். சுத்தம் கேட்டு, திடீரென விழித்து, எழவேண்டிய முக்கியத்துவத்தை உணர்ந்து, சோம்பல் முறித்து எழுந்து சென்று அதை அணைக்கும் ஒரு காலக்கெடுவை அது வளங்கிவிடுகின்றது என்பது குறிப்படத்தக்கது.
அந்தக்குறிப்பிட்ட செக்கன்களே மிக முக்கியமான நேரங்களாகும்.
முன்னேற்றமாவது மண்ணாவது, நீ முன்னேறித்தான் என்னத்தை கிழிக்கப்போறாய்? அதெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்பது எல்லாம் தூக்க அரக்கனின் கட்டளைகள்.
மறுபடியும் வந்து படுத்து இதோ இன்னும் ஒரு நிமிடத்தில் ஏழுந்திருப்போம், என உடல் கெஞ்ச மனமும் அதற்கு உடன்படும். படுத்துவிட்டு திரும்பி எழுந்து பார்த்தால், வழக்கமாக சாதாரணமாக எழும் நேரத்தைவிட தாமதமாகத்தான் கண்வழிக்கமுடியும்.
ஐயோ போச்சே.... போச்சே என்று மனம் பேதலித்து ரென்ஸனாகவேண்டியதுதான் மிச்சம்.
நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றுதான்,
என்ன நோக்கத்திற்காக அதிகாலை எழ வேண்டும் என்று அலாரம் வைக்கின்றோமோ, அந்த எழுச்சியால் எழும் சிறந்த பலாபலன்களையும், அவற்றின் மூலம் நாம் அடையப்போகும் நன்மைகள், பாராட்டுக்கள், வெற்றிகள் எல்லாவற்றையும் நாம் பெறுவதாக கற்பனை செய்துகொண்டு தூங்கவேண்டும். அலாரம் எப்போ அடிக்கும் என் புதிய செயல் தொடங்க என்ற வைராக்கியத்துடன் தூங்கவேண்டும்.
இதுமட்டும் நடந்துவிட்டால் அலாரச்சத்தம் கேட்டவுடனேயே, மனம் மகிழ்வுடன் உந்த, உடல் துள்ளி எழுவதையும், மனதில் மகிழ்ச்சிமிக்க ஆனந்த தருணம் உருவாவதையும் சாதிக்கும் எண்ணம் முழுமையாக இருப்பதையும் நீங்கள் உணரலாம். அந்த உறுதியே முழுமையான வெற்றிகளையும் உங்களுக்கு தந்துவிடும்.


Janarthanan Jana's photo.

No comments:

Post a Comment