Friday, July 24, 2015

இக்கட்டான நிலமையில் கூட உதவி செய்யாத கணவனை நினைத்து

மாலையில் நடைப் பயிற்சியை
முடித்துக் கொண்டு அந்த தம்பதியினர்
வீட்டுக்கு நடந்து வந்து
கொண்டிருந்தனர். வரும் வழியில் ஒரு
கயிற்றுப் பாலம் ஒன்று இருந்தது.
சற்று இருட்டியதால் இருவரும்
வேகமாக நடக்கத் தொடங்கினர். திடீரென
மழைச் சாரலும் வீசியது. வேகமாக
நடந்து கொண்டிருந்தவர்கள்
ஓடத்தொடங்கினர். கணவர் வேகமாக
ஓடினார்.
கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து
முடிக்கும் போது தான் மனைவி
பாலத்தினை வந்தடைந்தார். மழைச்
சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்து
வந்ததால் மனைவி பாலத்தை கடக்க
பயப்பட்டாள். அதோடு மின்னலும்
இடியும் சேர்ந்து கொள்ள பாலத்தின்
ஒரு பக்கத்தில் நின்று கணவனை
துணைக்கு அழைத்தால். இருட்டில்
எதுவும் தெரியவில்லை. மின்னல்
மின்னிய போது கணவன் பாலத்தின்
மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது
தெரிந்தது.
தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு
கணவனை அழைத்தாள். கணவன்
திரும்பிப் பார்க்கவில்லை. அவளுக்கு
அழுகையாய் வந்தது. இப்படி பயந்து
அழைக்கிறேன். என்ன மனிதர் இவர்
திரும்பி கூட பார்க்கவில்லையே என
மிகவும் வருந்தினாள். மிகவும் பயந்து
கொண்டே கண்களை மூடிக் கொண்டு
கடவுளிடம் பாரத்தைப் போட்டு மெல்ல
மெல்ல பாலத்தை கடந்தாள்.
பாலத்தை கடக்கும் போது இப்படி ஒரு
இக்கட்டான நிலமையில் கூட உதவி
செய்யாத கணவனை நினைத்து
வருந்தினாள். ஒரு வழியாக பாலத்தை
கடந்துவிட்டாள். கணவரை
கோபத்தோடு பார்க்கிறாள். அங்கு
கணவர் மழையில் ஒரு பக்கம் உடைந்து
தொங்கிக்கொண்டிருந்த கயிற்றுப்
பாலத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டிருந்தார்.
சில சமயம் கணவர் குடும்பத்திற்கு
எதுவும் செய்யாமல் மௌனமாக
இருப்பதாக தோன்றும். ஆனால்
உண்மையிலேயே அவர் தன்
குடும்பத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டுதான் இருப்பார். தூரத்தில்
பார்க்கும் போது அன்பு இல்லாதவர்
போல இருந்தாலும் அருகில் சென்று
பார்க்கும் போது தான் அவரின் அன்பு
தெரியவரும்.
வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை.
தூரத்தில் இருப்பது தெளிவாக
தெரிந்தாலும்
அருகில் வரும்போதே பொருள்
புரிகிறது.

No comments:

Post a Comment