Tuesday, July 14, 2015

கடைசிவரை காப்பாற்றி விட்டார் எம்.எஸ்.வி...!



“ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே ” என்பார் நம் அப்பர் சுவாமிகள்.
ஆனால்... ஒரு “ பளார் ” என்ற அடி ஓசைதான் ,
பலப்பல மெல்லிசைகளுக்கு அடிநாதமாக இருந்திருக்கிறது...
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. பற்றி , கதை வசனகர்த்தா ஆரூர்தாஸ் ஒருமுறை சொன்னது இது :
“தேவர் பிலிம்ஸ் தயாரித்த எல்லாப் படங்களுக்கும் அன்றைக்கு கே.வி. மகாதேவன் இசை அமைத்தார். வேட்டைக்காரன் பட சமயத்தில் ...இதில் ஒரு மாற்றம் வேண்டும் என்று சில விநியோகஸ்தர்கள் விரும்பியதன் காரணமாக, தேவரண்ணன் (சாண்டோ சின்னப்பாதேவர்) விஸ்வநாதன் வீட்டிற்குச் சென்றார். மொத்தப் பணத்தையும் எம்.எஸ்.வி.யிடம் நீட்டி, தன் படத்திற்கு இசை அமைக்கும்படி கூறினார் தேவர்...
பக்கத்தில் நின்று இதைக் கேட்டுக் கொண்டிருந்த விஸ்வநாதனின் தாயார் "பளார்” என்று தன் மகனின் கன்னத்தில் ஓர் அறை விட்டு " நன்றி கெட்டவனே! ஒரு காலத்துல நீ வேலை இல்லாம கஷ்டப்பட்டப்போ அய்யர்கிட்ட போய் (கே.வி. மகாதேவனிடம்) உதவி கேட்டப்போ, உனக்குப் போட்டுக்க சட்டை கொடுத்து, ரயில் செலவுக்குப் பணமும் கொடுத்து உன்னைக் கோயம்புத்தூருக்கு அனுப்புனாரே, அதை மறந்திட்டியா? அந்தப் புண்ணியவான் தொழில் பண்ற இடத்துக்கு நீ போட்டியா போகலாமா?'' என்று கோபத்துடன் கூறிவிட்டு... தேவரண்ணனை நோக்கிக் கை குவித்துக் கும்பிட்டு, "ஐயா! நீங்க எவ்வளவு பணம் குடுத்தாலும் எம்புள்ளை ஒங்க படத்துக்குப் பாட்டுப் போட மாட்டான். நீங்க அய்யரையே வச்சுப் போட்டுக்குங்க'' என்று உறுதியாகச் சொல்லி விட்டார்!
அந்தத் தாயார், இந்த வயதில் தன் மகனைக் கன்னத்தில் அறைந்ததைப் பார்த்தும், கூறியதைக் கேட்டும் கதிகலங்கிப் போன தேவரண்ணன் , அலுவலகத்துக்கு வந்து இதைக் கூறி, 'இப்படி ஒரு தாயும் பிள்ளையுமா?' என்று ஆச்சரியம் அடைந்தார்!”
# ஆரூர்தாஸ் சொன்னதை படித்து , நானும் ஆச்சரியம் அடைந்தேன்...
அன்று எம்.எஸ்.வி.யின் தாயார் , சின்னப்பதேவரிடம் ...
"ஐயா! நீங்க எவ்வளவு பணம் குடுத்தாலும் எம்புள்ளை ஒங்க படத்துக்குப் பாட்டுப் போட மாட்டான்.” என்று சொன்ன வார்த்தைகளை , கடைசிவரை காப்பாற்றி விட்டார் எம்.எஸ்.வி...!
“வேட்டைக்காரன்” மட்டும் அல்ல.. அதன் பின் தேவர் பிலிம்ஸ் தயாரித்த எந்தப் படத்துக்கும் எம்.எஸ்.வி. இசை அமைக்கவே இல்லையாம்...
# எம்.எஸ்.வி. இசையமைத்த “தேடி வந்த மாப்பிள்ளை” பாடல் இதயத்தில் ஒலிக்கிறது...
“அன்று தொட்டு நீ நினைத்த எண்ணம் என்னம்மா?
அதை இன்று தொட்டு நான் முடிக்கும் வண்ணம் பாரம்மா
வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்”

No comments:

Post a Comment