Saturday, August 2, 2014

நன்னடத்தை - நற்செயல் - மூச்சடக்கல்- புலனடக்கல்-சரப்பழக்கம்-இரண்டறக் கலத்தல்-இருக்கை-சமநிலை

நன்னடத்தை

"உடலை வளர்ப்பது உணவு, உள்ளத்தை வளர்ப்பது நமது இந்து சமய கருத்துக்களால் கிடைக்கும் இறைஉணர்வு"

நமது உடலை வளர்ப்பதற்கு சத்தான உணவுப் பொருட்கள் வாங்கி பக்குவமாக சமைக்க தெரிய வேண்டும். இதைப் போல உள்ளத்தில் இறைவனை நிலை நிறுத்துவதற்கு இங்கே கூறப்பட்டிருக்கும் இந்து சமயக் கருத்துக்களை எடுத்துக் கொண்டு பரிபக்குவமாக இறைவனை நினைக்கத் தெரிய வேண்டும்.

இதனால் நன்னடத்தை நம்மோடு இணைந்துவிடும். உலக வாழ்க்கைக்கு வெற்றி கிடைக்கும், மறுமை வாழ்க்கைக்கு அருள் கிடைக்கும். ஒவ்வொரு நாளும் யாருடைய மனம் படிப்படியாக திருந்தியமைகின்றதோ அம்மனிதரே உண்மையான நன்னடத்தை உடையவர் ஆகிறார். இந்த நன்னடத்தைதான் ஒருவரை பகவானிடம் இணைய வைக்க உறுதுணையாக இருக்கிறது. பொதுவாக கெட்டதைப் போக்க நாம் நம்மிடம் நல்லதைப் பெருக்க வேண்டும்.

நற்செயல்:

நன்னடத்தை உடையவர்கள்தான் நற்செயல்கள் செய்ய முன்வருகின்றனர். நற்செயலால், தான் சேர்த்த செல்வத்தை தெய்வீக காரியங்களில் ஈடுபடுத்தி மக்களுக்கு பக்தி பெறுக பயன்படுத்துகின்றனர்

மூச்சடக்கல்:

இறைவனை நினைப்பதற்கு சோம்பல் நிலை இருக்கக் கூடாது. இதைப் போக்க காலை நேரங்களில் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். இவ்வாறு செய்வதால் மனம் சுறுசுறுப்படையும். உடல் புத்துணர்ச்சி பெறும்.

        மூச்சுப் பயிற்சி செய்கின்ற நேரத்தில் பகவானை நினைத்துக் கொண்டே செய்வது அவசியமாகும்.

புலனடக்கல்:

       "மனவலிமை இல்லாதவர் நல்ல சந்தர்ப்பத்திற்கு காத்திருக்கிறார்,
        மனவலிமை உடையவர் நல்ல சந்தர்ப்பத்தை உண்டு பண்ணுகிறார்."

இதனால், நம் ஐம்புலன்களை வெளியில் போக விடாது, முறையாக அடிக்கடி இறைவனை நினைப்பதால், மந்திரம் கூறுவதால் மன வலிமை உண்டாகும். இந்த லட்சியம் உள்ளவர்களுக்கு புலனடக்கம் எளிதில் வந்து விடும்.

குடும்ப வாழ்க்கையில் புலனடக்கத்தோடு வாழும் தம்பதிகள் விந்து, யோனிதம் என்ற உயர்ந்த உயிர் அணுக்களை அதாவது விதைப் பொருட்களை அனாவசியமாக விதைப்பதில்லை. அப்படி அவர்கள் விதைக்க முற்படும் போது அங்கே இறை நினைப்பாளர்கள் உண்டாக்கப்படுகிறார்கள். தன் உள்ளத்தை ஒழுங்குபடுத்துபவரே உலகத்தை ஜெயிக்கும் உத்தமராவார்.

சரப்பழக்கம்

        இறைவனை நினைப்பதில் எல்லோர்க்கும் தடை ஏற்படுவது இயல்பே!
        மனம் ஓர் இடத்தில் லயிக்க மாட்டாது. இதற்கு நாம் செய்ய வேண்டியது என்னவென்றால்,
  1. மனதிற்குள்ளே மந்திரம் கூறிப் பழகுவது.
  2. மனக்கோயிலில் பகவானைச் சுற்றி சுற்றி வருவது.
  3. அடிக்கடி பகவானின் பாதத்தில் விழுந்து வணங்குவது.
  4. பகவானுக்கு பாத பூஜை பண்ணுவது.
  5. பகவானுக்கு தீப ஆர்த்தி எடுப்பது.
  6. இறை நினைப்போடு எந்தக் காரியத்தையும் தொடங்குவது.
  7. காரியம் கைகூடிய பின் பகவானுக்கு நன்றி கூறுவது.

இதை அடிக்கடி மானசீகமாக தனது மனக்கோயிலில் செய்து வருவதே சரப்பழக்கம் ஆகும்.

இரண்டறக் கலத்தல்

ஜீவாத்மாவும், பரமாத்மாவும் இணையும் தன்மையே இரண்டறக் கலத்தல் ஆகும்.

மேலே கூறப்பட்ட நன்னடத்தை, நற்செயல், மூச்சடக்கல், புலனடக்கல், சரப்பழக்கம் யாவும் நமக்கு இருக்குமேயானால் நமது ஜீவாத்மா பரமாத்மாவில் இரண்டறக் கலந்து விடும். இதனால் தெய்வீகத் தன்மை வெளிப்படும். மற்றவர்கள் நலனில் அக்கறை இருக்கும்.

       "தெளிந்த மனம்தான் புனிதமான கோயிலாகிறது
        உயர்ந்த உள்ளம்தான் கோயிலின் மூலஸ்தானமாகிறது"

இருக்கை

மனம் எந்த நேரத்திலும் பகவானது சிந்தனையிலே இருக்குமேயானால் அங்கே பகவான் காட்சியளிப்பார். அங்கே புலன்களுக்கு வேலை இல்லை. இதனால், இறைவன் நமது உள்ளத்தினுள் ஒளிர்கிறார்!

        கெட்ட உணர்வை நாம் ஒதுக்கித் தள்ள முடியுமானால், பகவானை நம் உள்ளே நாம் உணர முடியும்.

அப்படி உணருகின்ற ஆற்றல் நமக்கு வந்துவிட்டால் நமது உள்ளக் கோயிலில் பகவானை சிம்மாசனத்தில் அமர்த்தி, எண்ணத்தால் வலது பக்கம் திடமாக நாம் அமர்ந்து கொள்ள வேண்டும். இதுவே இறைவன் அருகாமையில் இருக்கும் இருக்கை.

உயிர்களிடத்தில் சமநிலை:

மானசீகமாக பகவான் அருகில் இடைவிடாது இருக்கப் பழகி விட்டால் உயிர்களிடத்தில் சமநிலை தானாக வந்துவிடும்.

இரட்டைகளாகிய நல்லது-கொட்டது, இன்பம்-துன்பம் இரண்டிற்கும் மனம் பதற்றப்படாது. தெளிவும், தெய்வீக நினைப்பும் எப்பொழுதும் இருக்கும். பந்தமும், பாசமும் ஒதுங்கி அங்கே அன்பு மலரும். அன்பு பொது நலம். ஆனால் பந்தமும் பாசமும் சுய நலம்.

       "பகவானிடம் சரணடைந்தவருக்கு ஒருபோதும் தளர் நடை உண்டாவதில்லை.
        எல்லா உயிர்களிடத்தில் சமநிலை இருக்கும்."

No comments:

Post a Comment