Wednesday, September 3, 2014

இலக்கு இன்னது என எழுது - By சைலேந்திர பாபு

எதிர்கால இலக்கு இன்னது என உறுதி செய்தபின், ஒரு நோட்டுப்புத்தகத்தை எடு, அந்த இலக்கைத் தெளிவாக எழுது, ஒரு முறைக்கு இரு முறை படி, தெளிவாக அமையவில்லை என்றால் திருத்து. பெற்றோரிடம் படித்துக் காட்டு. அவர்கள் ஏதேனும் ஏற்றுக் கொள்ளத்தக்கக் கருத்தைச் சொன்னால் ஏற்றுக் கொள்.
நீ விமானப் பொறியாளராக எண்ணியிருப்பாய், அப்பா, விமானியாகலாமே என்று சொல்லியிருப்பார். அது சரி எனப்பட்டால் உன் இலக்கை சற்றே மாற்றி எழுது. தினந்தோறும் காலையிலும், இரவில் படுக்கும் முன்பும் அதைப்படி, உற்று நோக்கு, ஆழ்மனதில் உள்வாங்கு. பின்வருமாறு உனக்கு நீயே சொல்லிக்கொள். உளவியலார் இதை Auto Suggestion என்பார்கள். இதற்குச் சக்தி அதிகம் உண்டு.
நான் நாசா (NASA) விஞ்ஞானியாக வர விரும்புகிறேன். விண்வெளி விஞ்ஞானியாக வர விரும்புகிறேன். நோபல் பரிசு பெறுவது என் இலட்சியம். ஹார்வட் பல்கலைக் கழகத்தில் MBA படிப்பது என் நோக்கம். உலகப்புகழ் வாய்ந்த இதயநோய் மருத்துவராக வருவதே என் ஆசை. ஒரு IFS அலுவலராக வர வேண்டும். உலகத்தில் மிகப்பெரிய வணிகராக வர வேண்டும்.
இவ்வாறு உள்ளத்தில் உறுதியோடு சொல். நம் திருவள்ளுவர் கூறும் வெற்றிச் சத்திரம் என்ன தெரியுமா?
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்.
- குறள்
காலத் திட்டத்துடன் கூடிய இலக்கு:
இலக்கை அடைவதற்கான காலத் திட்டத்தை வகுத்துக் கொள். காலக்கெடுவை விதிக்காத யாரும் எந்த செயலிலும் வெற்றியடைய முடியாது.
என்னுடைய பல்வேறு பணிக்கிடையிலும், எந்த கால நீட்டிப்பும் பெறாமல் முயன்று முனைவர் பட்டத்தைப் பெற்றேன். என்னுடைய நண்பர்கள் பலர் பதிவு செய்ததோடு சரி, பி.எச்.டி. பட்டம் பெற்றபாடில்லை. நீ ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாய் ஆக வேண்டும் என்றால் – 30 வயதுக்குள் – அதை அடைந்தாக வேண்டும்.
”பருவத்தே பயிர் செய்” – என்று கூறுகிறார் ஔவையார். காலத்தின் அருமையை உணர்த்த, தனி அதிகாரம் வகுத்தவர் திருவள்ளுவர். இந்தக் குறளை மிகப்பெரிய எழுத்துகளில் எழுதி, கண்ணில் படும்படி வை.
ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின்.
இப்போது காலக்கெடுவோடு கூடிய இலக்கை எழுது.
- என்னுடைய 35-ஆம் வயதில் நாசா (NASA) விஞ்ஞானியாய் ஆவேன்.
- 40 வயதில் நோபல் பரிசு பெறுவேன்.
- ங.ஆ.ஆ.ந. படிப்புக்குப்பின் 20 ஆண்டுகளில் உலகப் புகழ்பெற்றஇதய நோய் மருத்துவராய் வருவேன்.
- என் 50 வயதில் உலகப் பணக்காரர்களுள் ஒருவராய் வருவேன்.
பல குறுகிய காலத் திட்டத்தை வகுத்துக் கொண்டு, மேற்காண் நீண்டகாலத் திட்டத்தைச் செயற்படுத்த வேண்டும். இத்தகைய காலத்திட்டம் இல்லாவிட்டால், கனவு. வெறுங்கனவாய் ஆகிவிடும். முக்கியமான ஒன்று. தள்ளிப்போடும் பழக்கத்தை விட்டொழி. ஒன்று செய், நன்று செய், அதை இன்றே செய்.
எடுத்துக்காட்டாக, விண்வெளி விஞ்ஞானியாக வர வேண்டுமா? இப்படி ஒரு காலத்திட்டத்தையும் இலக்குகளையும் வகுத்துக் கொள்.
மேல்நிலைப் பொதுத்தேர்வில் மிகச் சிறந்த மதிப்பெண் பெறுவது.
- ஐஐப ல் இடம் பிடிப்பது.
- நான்கே ஆண்டுகளில் விமானவியல் பொறியியல் பட்டம் பெறுவது.
- அடுத்த இரண்டு ஆண்டுகளில் விண்வெளி தொழில் நுட்பத்துறையில் ஒரு முதுநிலைப் பட்டம் பெறுவது.
- அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாசாவில் (NASA) பணியில் அமர்வது.
- அடுத்த இரண்டு ஆண்டுகளில் விண்கல விமானிகள் குழுவில் இடம் பெறுவது.
இப்படி படிப்படியாக ஏறித்தான், வெற்றி என்னும் மலை முகட்டைத் தொட வேண்டும்.
இலக்கில் வெறி கொள்:
இலக்கில் உனக்கொரு வெறி இருக்குமானால், உன் எண்ணமெல்லாம் அதையே சுற்றி வரும். சொல்லப்போனால் உன் ஆழ்மனதில் அந்த இலக்கு அடைகாக்கப்படும். கட்டிடக் கலைஞராவது உன் இலக்காக இருந்தால், ஓர் அழகிய கட்டிடத்தைப் பார்த்தால் உன் மனம் அதை மறுமுறையும் பார்க்கத் தூண்டும். அதாவது, நீ உன் இலக்கை நோக்கி ஈர்க்கப்படுகிறாய்.
உன் இலக்கை எண்ணிப் பார்த்தால் மட்டும் போதாது. அதை உணர வேண்டும். நீ மருத்துவராக வர விரும்புகிறாயா? உன்னை மருத்துவராகவே கருதி உன்னுடைய சொந்த மருத்துவமனையின் அறுவை அரங்கில் நுழைவதாகக் கற்பனை செய். ஓர் இக்கட்டான அறுவையை வெற்றிகரமாக செய்து முடித்ததாகக் கற்பனை செய். உயிரைக் காப்பாற்றிய உன்னை, அந்த நோயாளி கையெடுத்துக் கும்பிடுவதை உணர். ஆழ்மனதில் இவ்வாறு எண்ணிப் பார்ப்பதை உளவியலார் Positive visualization என்பர். இவ்வாறு செய்வதால் உன்னுடைய ஒட்டுமொத்த செயல்பாடும் இலக்கை நோக்கி மாற்றியமைக்கப்படும். இலக்கை அறி, உணர், உரக்கச்சொல், உழை, ஒரு நாள் உன் கனவு நனவாகும்.
இலக்கிலிருந்து விலகாதே:
இலக்கில் தெளிவு இருந்தால் மட்டுமே அதனை அடைய முடியும். ”தெளிவு பெற்றமதியினாய் வா வா வா” என்பார் பாரதியார். அதோடு இலக்கின் பால் ஒரு வெறி வேண்டும். அர்ப்பணிப்பு வேண்டும். இலக்கில் நம்பிக்கை அற்றவர்கள் ஒரு போதும் வெற்றியடைய முடியாது.
உலக வரலாற்று ஏடுகளில் பதிவாகியுள்ள ஒரு சம்பவம். அது 1502- ம் ஆண்டு. ஸ்பெயின் நாட்டுத் தளபதி, நான்கைந்து கப்பல்களில் ஏராளமான போர் வீரர்களுடன் கடற்பயணம் மேற்கொள்கிறான். தென் அமெரிக்க கடற்கரையை அடைந்ததும், கப்பல்களை வரிசையாக நிறுத்துகிறான். வீரர்கள் இறங்கி அணிவகுத்து நிற்கின்றனர். ஒரு கப்பலைத் தவிர அனைத்தையும் கொளுத்த ஆணையிடுகிறான். பிறகு வீரர்களைப் பார்த்துச் சொல்கிறான். அருமை வீரர்களே! நான் போரிட துணிந்து விட்டேன். எதிரியைக் கண்டு பயப்படுவோர் இருந்தால், அதோ நிற்கிற கப்பலில் ஏறிக்கொள்ளட்டும். நான்காயிரம் மைல்கள் கடந்து வந்த நாம் வெறுங்கையோடு திரும்பலாமா? இரண்டே வழிகள்தாம் – போரிட்டு வெற்றி வாகைச் சூடுங்கள் அல்லது எதிரிகளால் செத்தொழியுங்கள்.
இந்த வீர உரையைக் கேட்ட வீரர்கள் உயிரைக் கொடுக்கத் திரண்டெழுந்தார்கள். வெகுண்டு எழுந்தார்கள். பிறகென்ன? வெற்றிக் கனியுடன் நாடு திரும்பினான் படைத் தளபதி கார்ட்டஸ்.
அந்த கார்டடசைப் போல உன் இலக்கில் வெற்றியடைய மன உறுதியுடன் போராடு.
ஒரு மன உறுதியுள்ள மனிதர் தான் நினைத்ததை அடைந்தே தீருவார் – எனக்குத் தெரிந்த பலர் ஐ.ஏ.எஸ். தேர்வில் பலமுறை தோற்றும், இறுதியில் வெற்றியடைந்துள்ளார்கள். நான் பயிற்சி அளித்த ஓரு மாணவி இந்த ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் இந்தியாவில் முதலிடம் பெற்றார். அவர் சென்றஆண்டு தேர்வில் முதல் கட்டத்திலேயே தோல்வியடைந்தவர். வெல்வது உறுதி என்றவெறியோடு இருந்ததால், அவர் தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல், வெற்றியிலிருந்து பாடங்கற்றுக் கொண்டார்.
தோல்வி என்றால் கற்றுக் கொள்வோம்
வெற்றி என்றால் பெற்றுக் கொள்வோம்.
என்றசமநிலை உணர்வோடு தொடர்ந்து முயன்றதால் அவர்; வெற்றிவாகைச் சூடினார்.
உனக்கு மனஉறுதி மட்டும் இருந்தால், எத்தகைய பலம் வாய்ந்த எதிரிகளையும் வெற்றி கொள்ள முடியும்.
வரலாற்றுப் புத்தகத்தைக் கரைத்துக் குடித்து 100க்கு 95 மதிப்பெண் பெறுவதால் மட்டும் பயனில்லை. அந்த வரலாற்றிலிருந்து நீ என்ன கற்றுக் கொண்டாய்? கற்றதை உன் வாழ்வில் எவ்வாறு பயன்படுத்துகிறாய் என்பதைப் பொறுத்தே உன் வெற்றி அமையும்.
இதோ ஜப்பானின் வரலாறு. 1945-ல் நடந்த உலகப்போரில் ஜப்பான் தரைமட்டமானது. அணுகுண்டு தாக்குதலில் நாட்டு மக்கள் வீடுகளை இழந்து நடுத்தெருவில் நின்றனர். அமெரிக்க நாடு உணவும் உடையும் கொடுத்ததோடு கடனும் கொடுத்து உதவியது. கடும் உழைப்பின் காரணமாக, பதினைந்தே ஆண்டுகளில் போருக்கு முந்தைய நிலையை எட்டியது ஜப்பான். ஆனாலும், அந்த கால கட்டத்தில் – அதாவது 1960-ல் உலகின் மிகப்பெரிய கடன் பெறும் நாடாக இருந்தது ஜப்பான். உலகின் மிகப்பெரிய கடன் கொடுக்கும் நாடாக இருந்தது அமெரிக்கா.
தொடர்ந்து ஒரு வெறியோடு பாடுபட்டனர் ஜப்பானியர். 1985ம் ஆண்டு நிலை என்ன தெரியுமா? ஜப்பான் உலகிலேயே மிகப்பெரிய கடன் கொடுக்கும் நாடு, அமெரிக்கா மிகப்பெரிய கடன் வாங்கிய நாடு. இந்த தலைகீழ் மாற்றம் எப்படி நிகழ்ந்தது? ஆதி காலத்திலிருந்தே ஜப்பானியர் உழைப்பதில் கட்டுப்பாடும், களப்பாடும் கொண்டார்கள். அந்நாட்டின் சமுராய் வீரர்கள் அர்ப்பணிக்கும் பண்பாளர்கள். வெல் அல்லது மண்ணை விட்டு செல் என்பதுதான் அவர்களின் தாரக மந்திரம்.
தன்னுடைய சாம்பலிலிருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை போல, போரினால் வீழ்ந்தாலும், சுனாமியால் புதைந்தாலும் விழுந்த வேகத்தில் எழுந்து நிற்கிறார்கள் ஜப்பானியர்.
வீழ்வது தவறல்ல, வீழ்ந்தே கிடப்பது தான் தவறு – வரலாறு போதிக்கும் இந்த பாடத்தை முதலில் கற்றுக் கொள், வெற்றி உனதே.
கனவு தான் உனது வாழ்க்கை, எனவே அதனைப் போற்று, உழைப்பால் அதை நனவாக்கு. உன் இலக்கை எழுத்தில் வடி. நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவைப் பிடித்தார். டென்சிங் இமயத்தின் சிகரம் தொட்டார். லுட்யிஸ் பாஸ்டர் வெறிநாய்கடி நோயை ஒழித்தார். விஸ்வநாதன் ஆனந்த் உலகப் பட்டம் வென்றார். அபிநவ் பிந்த்ரா ஒலிம்பிக் சென்றார், தங்கம் வென்றார். ஏ.ஆர். ரஹ்மான் ஒரே கல்லில் இரு ஆஸ்கர் வென்றார். ஆமாம், நீ எதைச் சாதிக்கப் போகிறாய்? சாதிக்க எண்ணியிருப்பதை ஒரு தாளில் எழுதி சத்திரமாக்கு, சாதித்துக் காட்டி அதைச் சரித்திரமாக்கு. உன்னால் முடியும், உன்னால் மட்டுமே முடியும்.
மகா அலெக்சாண்டர்
2300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மாவீரன் அலெக்சாண்டர், கிரேக்க நாட்டின் அரசரான தன் தந்தையுடன் பதினெட்டு வயதிலேயே படைநடத்திச் சென்றவன். தன் இளம் வயதில் பயம் என்பதை அணுவளவும் அறியாதவராய் இருந்தான். யாராலும் அடக்க முடியாத ‘புவிபேரஸ்’ என்றஅடங்காக் குதிரையை அடக்கி அதன் மீது சவாரி செய்தவன்.
அவரது இருபதாவது வயதில், அவர் தந்தை கொல்லப்பட்டார். மனந்தளராத அலெக்சாண்டர் அடுத்த இரண்டே ஆண்டுகளில் தன்னந்தனியாக 3500 வீரர்கள் கொண்ட படையை நடத்திச் சென்று பெர்சியன் சாம்ராஜ்யத்தை வென்றான்.
அவன் போர் நடத்திப் பெற்றவிழுப்புண்களுக்கு அளவே இல்லை. அதேபோல் அவன் வென்றநாடுகளுக்கும் அளவே இல்லை. ஒரு கட்டத்தில் வடமேற்கு இந்தியாவில் நுழைந்து பஞ்சாப் சிற்றரசர்களை வென்றான். ஆனால் அவனுடைய படைவீரர்களே அவனுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியதால் நாடு திரும்பினான். நலிவுற்றான் காய்ச்சலால். தனக்குத் தெரிந்த உலக நாடுகள் அனைத்தையும் வென்றமாவீரன், தன் 33-ம் வயதில் மறைந்தான்.
இன்றும் உலகின் பல்லாயிரக்கணக்கான படைவீரர்கள் அவனை முன்மாதிரியாகக் கொள்கிறார்கள். அவனுடைய தாய் ஒலிம்பியா, அவனுடைய மூன்றாம் வயதிலேயே வீரத்தை ஊட்டி வளர்த்தார். உலகப்புகழ் பெற்றதத்துவஞானியும், விஞ்ஞானியுமான அரிஸ்டாட்டில் அவனுடைய ஆசானாக அமைந்தது அவன் செய்த பேறு.
ஹோமர் எழுதிய இலியாத் என்னும் காப்பியத்தின் கதாநாயகன் அச்சிலீஸ். மகனே, நீ அச்சிலீஸ் பரம்பரையில் வந்தவன். உலகை வெல்வாய்” என்று தன் தாய் கூறிய சொற்களை கனவாக, இலக்காக ஏற்றுப் போற்றி, நனவாக்கிக் காட்டியவன் இந்த அலெக்சாண்டர். ஒருபடி மேலே போன அரிஸ்டாட்டில், சிறுவன் அலெக்சாண்டரை அச்சிலீசின் மறுபிறவி என்று பிரகடனப்படுத்தினார்.
அன்னை கூற்றும், ஆசான் கூற்றும் அவனை போர்வெறி கொள்ளச் செய்தன. அந்தப் போர் வெறி உன்னுடைய ஆழ்மனதில் உருவாகி விட்டால் அல்லது நீயே அதை உருவாக்கி விட்டால் இறுதி வெற்றி உறுதி.
அன்னையின் ஆசையைத் தெரிந்து கொள்.
ஆசிரியரின் அறிவுரையை ஏற்றுக்கொள்.

No comments:

Post a Comment