Tuesday, May 28, 2013

தோற்கலாம் வாங்க

தோற்கலாம் வாங்க
                                                                                                        வணக்கம். என் அன்பு ஆனந்த வாசகர்களே வாருங்கள் தோற்போம். நம் ஆனந்த மாத இதழில் தோற்காமல் வரும் ஒரு முக்கியமான பகுதி தோற்கலாம் வாங்க. ஒவ்வொரு நாளும் தோல்வி எங்கிருந்து தொடங்குகிறது? காலையில் நாம் வைக்கும் அலாரம் அடிக்கும் நேரத்தில் கண் விழிக்காமல் இருப்பதிலிருந்துநோக்கம் இல்லாதவர்களும் தோல்வியாளர்கள் தான். வாழ்வில் மிகப்பெரிய சோகம் நமது நோக்கத்தை அடையாமல் இருப்பதல்ல, ஒரு நோக்கமே வாழ்வில் இல்லாமல் வாழ்ந்து விடுவதுதான். நமக்கு என்று நோக்கம் இருக்க வேண்டும் அப்போது தான் வாழ்க்கையில் தேக்கம் இல்லாமல் வாழ முடியும். ஏன்என்றால் தேங்கும் நீர் அழுக்கு நிறைந்த குட்டையாகும், ஒடும் நீர் தெள்ள தெளிவாக இருக்கும். இவ்வாறு நாம் நம் வாழ்க்கையில் ஒடும் பொழுது பல தடைகள் வரும். எப்படி ஒரு ஆறு உருவாகிய இடத்திலிருந்து கடலை சென்று அடைய பல தடைகளை தாண்ட வேண்டியுள்ளதோ அதுபோல தோல்வி என்ற தடைகளை தாண்டினால் தான் நமக்கு வெற்றி.

                   அப்படி, பல தோல்வி என்ற தடைகல்லை படிக்கற்களாக மாற்றி தரைமட்டத்திலிருந்து அவர்களது வாழ்க்கையில் வெற்றிக்கோட்டையை உருவாக்கியவர்களின் அனுபங்கள் நமக்கு பல விதத்தில் திறன்பட செயல்பட உதவி செய்யும். அப்பேர்பட்டவர்களின் வரிசையில் இம்மாதம் நாம் தமிழ்நாட்டின் மான்செஸ்டர் கோவையிலிருந்து உருவாகிய முதல் விஞ்ஞானி, படிக்காத மேதை, பல படைப்புகளின் மேதை, கோவையின் தங்கம், இப்பொழுதும் கோவையின் மையத்தில் சிங்கம் என சிலையாய் நின்று பிரமிப்பை ஊட்டும் திரு.ஜீ.டி.நாயுடு அவர்களைப் பற்றி பார்ப்போம்.

                    ஏன் இவர் இந்த மாதம் என்று பார்க்கிறீர்களா? மே மாதம் தொழிலாளர் தினம் சிறப்பு புத்தகமாக ஆனந்தம் வந்துள்ளது. அதில் கோவையில் பல புதிய தொழிலை உருவாக்கிய இவரைப் பற்றி பார்ப்பது நமது கடமை என்பது தான்.
                     தான் இருந்த, தொட்ட எல்லா துறையிலும் சாதித்த மனிதர், பள்ளிப்படிப்பை நான்காவதோடு விட்ட மனிதர், லாங்ஷெயர் எனும் வெள்ளையரிடம் இருந்த பைக்கை ஹோட்டலில் வேலை பார்த்து பணம் சேர்த்து வாங்கி, பிரித்து சேர்த்து சாதித்தார். பஸ் விடுதலை தொடங்கி 600-க்கும் மேற்பட்ட பஸ்களை விடுகிற அளவுக்கு உயர்ந்தார். அரசாங்க ஆதரவு முற்றிலும் கிடைக்கவில்லை. மின்சாரத்தில் இயங்கும், வெட்டுக்காயங்கள் உண்டு பன்னாத சேவிங் ரேசரை ஐம்பதுகளில் உருவாக்கினார்.                     
                        ஒரே வாழைத்தாரில் ஆயிரம் காய்கள் காய்க்கும் வகையில் புரட்சி செய்த வேளாண் விஞ்ஞானி அவர். இந்த நாட்டில் இளைஞர்களை கெடுப்பவை சினிமா, அரசியல், பத்திரிக்கைகள், பெற்றோர்கள் ஆகிய நான்கும் தான் என தெளிவாக சொன்னார். கிண்டி பொறியியல் கல்லூரி உட்பட மிக சிறந்த பொறியியல் கல்லூரிகள், ஐந்து வருட காலத்தில் உருவாக்கும் திறன் மிகுந்த மாணவர்களை, ஒரே வருடத்தில் உருவாக்கிக் காண்பிப்பதாகச் சொல்லி சில தோல்விகளுக்கு பிறகு சாதித்தும் காட்டினார். எஞ்கின் ஒடிக்கொண்டிருக்கும் போதே அதன் அதிர்வு விகிதம் அதிகமா, குறைவா என்பதைக் கண்டுபிடிக்க vibrate tester என்ற இயந்திரத்தையும் கண்டுபிடித்தார். பழச்சாறு பிழிந்து எடுக்க ஒரு கருவி, எந்தவித வெட்டுக்காயமின்றி முகச்சவரம் செய்துகொள்ள பிளேடு, டிக்கெட் மெஷின், பல்வேறு பூட்டுகளை (ஆயிரக்கணக்கான பூட்டுகள்) திறக்கும் மாஸ்டர் கீ முதலியவை இவரின் பிற கண்டுபிடிப்புகள்.


                            இந்தியாவில் முதல் மின்சார மோட்டார் தயாரிக்கும் தொழிற்சாலை இவராலே தொடங்கப்பட்டது. கோவையில் தேர்தலில் தோற்றதால் மனிதர் கண்டுபிடித்துக் கொடுத்தது தில்லு முல்லு செய்யமுடியாத மின்சார ஒட்டுப்பதிவு இயந்தரம். எழுபது ரூபாயில் ரேடியோ என அவர் உருவாக்கிய பல திட்டங்கள் அரசாங்க ஒத்துழைப்பு இல்லாமல் நின்றுபோனது. அவரின் பட்டறையில் ஒரு செருப்பும், கீழ்கண்ட வாசகம் தொங்கிக்கொண்டே இருக்குமாம். ‘அவரவர் செய்ய வேண்டிய வேலையைச் செய்ய வேண்டிய முறையில் செய்யாமல் போனால் 25 ரூபாய் அபராதமும், இதனால் ஒரு அடியும் கிடைக்கும்’. அவர் சொன்ன வரிகளை நாம் அனைவரும் மனதில் நிருத்திக்கொள்ளலாம். 21 வயது வரை படி, பிறகு பத்து ஆண்டுகள் ஏதாவது துறையில் வேலைசெய், பிறகு உன்னுடைய படிப்பையும் பத்து ஆண்டுகள் அனுபவத்தையும் வைத்து தொழில் செய். குறைந்தது அடுத்த இருபது ஆண்டுகளுக்குத் தொழில் செய்து பொருள் ஈட்டு, பிறகு உன்னுடைய படிப்பு, ஞானம் எல்லாம் பிறருக்குப் பயன்படப் பணி செய் என்று சொல்லியவர் நம் விஞ்ஞானி திரு.ஜீ.டி.நாயுடு.
                          


    பலதரப்பட்ட முயற்சிகள், அதற்கான பயிற்சிகள் வாழ்க்கையின் முழு நேரமும் உழைப்பு என்று அவர் உருவாக்கியவைகளை  அரசு உபயோகிக்கவும் இல்லை, அங்கீகரிக்கவும் இல்லை, இருந்தாலும் இத்தனை தோல்விகளையும், வலிகளையும் தாண்டி திரு.ஜீ.டி.நாயுடு இன்று கோவையில் அனைத்து தொழிலாளர்க்கும் மிகப்பெரும் உதாரணமாக இருந்து வழி நடத்துகிறார்.

-    ஸ்டார் ஆனந்த்

No comments:

Post a Comment