Showing posts with label Motivation. Show all posts
Showing posts with label Motivation. Show all posts

Friday, June 17, 2016

ஆழ்மனது என்பது கணினியில் உள்ள 'ஹார்டு டிஸ்க்' போன்றது

ஆழ்மனது என்பது கணினியில் உள்ள 'ஹார்டு டிஸ்க்' போன்றது. நம்முடைய கடந்த கால, நிகழ்கால சுவையான, கசப்பான அனுபவங்களை சேர்த்துக்கொண்டே இருக்கும். எப்போதாவது ஏதேனும் புதிய சூழ்நிலையை சந்திக்கும் போது நம்முடைய சுயநினைவு அதை சார்ந்த நினைவுகளை ஆழ்மனதிலிருந்து எடுத்துக்கொள்ளும்.

நம்முடைய ஆழ்மனதில் அதிகமாக எதிர்மறையான சூழ்நிலைகளையும், நினைவுகளையும் சேர்த்துவைக்கும் போது நம்முடைய வாழ்விலும் அதிகமாக எதிர்மறையான சூழ்நிலைகளையே சந்திக்க நேரிட்டு வாழ்வும் தவறான பாதைக்கு சென்று விடுகிறது.

நம்மை இயக்கும் ஆழ்மனம் :ஆழ்மனதில் நேர்மறையான எண்ணங்களை விதைக்கும் போது அது அவர்களுக்குள் சென்று எதிர்மறைகளால் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்து மனதை குணப்படுத்தும் சக்தியை பகிரங்கமாக காணும்படி செய்யும். ஆழ்மனம், நாம் உறங்கும்போது கனவுகளோடு செயல்படுகிறது. வருகின்ற கனவுகள் நமது ஆழ்மனதின் பிரதிபலிப்பு.

திகில், பயம், குற்ற உணர்வு நிறைந்த கனவுகள் இதற்கு உதாரணம். ஆழ்மனதில் எதிர்மறையான எண்ணங்கள் இருந்தால் அது கனவுகளில் வெளிப்படும். நம் உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளையும் இயக்குவது நம் ஆழ்மனமே.ஆழ்மனது நம்முடைய எண்ணங்கள், உணர்வுகள், நம்பிக்கை போன்றவற்றை வைத்தே செயல்படும். செல் உயிரியலாளர் டாக்டர் ப்ரூஸ் லிப்டன் ஆய்வில், 'நம்முடைய நம்பிக்கைகள் டி.என்.ஏ.,வில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது' என்று கூறியுள்ளார்.

நம்முடைய நம்பிக்கைகள் நேர்மறையாக இருந்தால் அவை நமக்குள் இருக்கும் பழைய டி.என்.ஏ., செல்களின் மேல் புதிய டி.என்.ஏ., செல்களை உருவாக்குகின்றது. இதை 'எப்பிஜெனிடிக்ஸ்' என்று கூறுவர். உடலில் ஏற்படும் பல பிரச்னைகளுக்கு நம்முடைய எதிர்மறையாக எண்ணங்களே காரணம். இதை மருத்துவர்கள் 'சைக்கோசொமட்டிக் டிஸ்சாடர்' என அழைக்கின்றனர்.

நம்பிக்கையின் சக்தி :விஞ்ஞானி டாக்டர் கிரக் ப்ராடன் ஆய்வில், 'நம்முடைய உணர்வுகள் மற்றும் நம்பிக்கைகள் நம்முடைய உடலை அதன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது' என கூறுகிறார். அவர் எழுதிய 'டிவைன் மேட்ரிக்ஸ்' என்னும் புத்தகத்தில் ஒருவர் சிறுநீரகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருடைய புற்றுநோய் முற்றிப்போன நிலையிலும் மருத்துவர்கள் அவருக்கு நம்பிக்கை அளித்தனர்.

அவர் சீனாவில் பீஜிங் நகருக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு 'சைனங் க்யுகாங்' என்னும் மாறுபட்ட ஒரு சிகிச்சை முறை அளிக்கப்பட்டது. இரண்டே நிமிடங்களில் புற்றுநோய் கட்டி இடம் தெரியாமல் மறைந்துபோனது. இச்சம்பவத்தை வீடியோவில் பதிவு செய்து மருத்துவர்கள், ஒரு கருத்தரங்கில் திரையிட்டனர். அவர்கள் என்ன பேசுவது என தெரியாமல் திகைத்து நின்றனர்.பின், இந்த சிகிச்சைக்குப் பின்னால் இருக்கும் ரகசியத்தை அவர்களிடம் கிரக் ப்ராடன் எடுத்துரைத்தார்.

'அம்மருத்துவர்கள் அப்பெண்ணுக்கு நீங்கள் முழுவதாக குணமடைந்து விட்டீர்கள் என்று முழு மனதாக நம்பும்படி கூறி அவர்களை அம்மனநிலைக்கு எடுத்துச்சென்றனர். பின், அங்கு கூடியிருக்கும் மருத்துவர்களும் அவர்களுக்கு புற்றுநோய் குணமடைந்து விட்டது என, மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டே அந்த சிகிச்சை அளிக்கும் அறையில் நேர்மறையான உணர்வுகளை அதிகமாக வரவழைத்தனர். எனவே அந்த நேர்மறையின் தாக்கம் அப்பெண்னுக்குள் சென்று அவர்களுக்கு உடனே சுகம் கிடைத்தது' எனக் கூறினார்.

கர்மாவின் தாக்கம் :டாக்டர் மேக்ஸ் ப்ளாக் என்பவர், 'நமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி உள்ளது; அது நாம் வாழும் உலகத்தில் ஒவ்வொருவரும் எப்படி இருப்பார்கள் என தீர்மானித்துவிடுகிறது. வாழும் உலகை அது அதன் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது. அதை டிவைன் மேட்ரிக்ஸ் என்றும் கடவுளின் சக்தி என்றும் அழைக்கலாம்' எனக் கூறியுள்ளார்.

நம்முடைய உணர்வுகள் மற்றும் நம்பிக்கை இந்த கடவுளின் சக்தியிடம் தாக்கம் செலுத்துகிறது. அதற்கேற்றவாறு நம் வாழ்க்கை அமைகிறது. 'நம்முடைய நம்பிக்கைகள் மற்றும் உணர்வுகள் நமது டி.என்.ஏ., வை கட்டுப்படுத்துகிறது' என ஆய்வில் கூறியுள்ளார். 'நாம் நம்முடைய எண்ணங்களையும் உணர்வுகளையும் நேர்மறையாக வைத்திருக்க வேண்டும்' என கூறியுள்ளார்.

நம் வாழ்வில் நாம் செய்யும் அனைத்து நன்மையும் தீமையும் கர்மாவில் சேர்ந்துக்கொண்டே வரும். எளிமையாக சொன்னால் எதை விதைக்கிறோமே... அதை அறுக்கிறோம். கர்மா என்பது பிரபஞ்சத்தின் நீதி என்று கூறலாம்.

எண்ணங்களின் வண்ணங்கள் :நம்முடைய உடலில் 63 ஆயிரம் கோடி செல்கள் உள்ளன. அதில் பல வண்ணங்கள் உள்ளன. மருத்துவரால் அந்த வெவ்வேறு வண்ணத்தின் காரணத்தை கூற முடியவில்லை. ஆனால் அது கர்மாவின் தாக்கம் என கூறலாம். ஒரு மனிதனின் கர்மாவின்படி அவன் உடலில் உள்ள செல்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 'ஆரா கேமரா' மூலம் ஒருவரை படம் பிடித்தால் பல வண்ணங்களை வெளிப்படுத்தும்.

அந்த வண்ணங்களை வைத்து உடலில் உள்ள எலக்ட்ரோ மேக்னடிக் தாக்கத்தை அறிந்து கொள்ளலாம். ஆரா போட்டோவில் உள்ள வண்ணங்களை வைத்து நம் மனநிலையை எளிதில் கணக்கிட முடியும்.டாக்டர் பிரேன் வைய்ஸ் புகழ்பெற்ற மனநல மருத்துவர். மனிதனுடைய ஆத்மா பற்றியும் முற்பிறவி பற்றியும் நிரூபித்திருக்கிறார். ஒருவருடைய கடந்த காலத்தை பார்ப்பதற்கு பல வழிமுறைகள் இருக்கிறது.

ஒருவர் அவருடைய கடந்த கால நினைவுகளை அடையும் போது அவர்கள் தற்காலத்தில் வாழும் நோக்கம் மற்றும் அவர்களின் கர்மா என்ன என்பதையும் அறிந்துகொள்வார்கள். 

Sunday, December 20, 2015

கந்தர் சஷ்டி கவசம் படித்தால் கிடைக்கும் நன்மை என்ன?

கந்தர் சஷ்டி கவசம் படித்தால் கிடைக்கும் நன்மை என்ன?

சில வருடங்களுக்கு முன் ஒரு நிறுவனத்தில் நான் பணிபுரிந்து கொண்டிருந்த போது அங்கே தொழிலாளர்களை உற்சாகப்படுத்தும் சில வகுப்புகள் நடத்தப்படுவதுண்டு.

அது ஒரு பங்குச்சந்தை வியாபார நிறுவனமாக இருந்ததால் மார்க்கெட்டிங் வேலை மிக முக்கியமானதாக இருந்தது. பங்குச்சந்தை மார்க்கெட்டிங் என்றால் சாதாரனம் இல்லை. உங்களிடம் இருக்கும் பணத்தை நீங்கள் முழித்திருக்கும் போதே உங்கள் சட்டைப்பையிலிருந்து எடுத்து நிறுவனத்திற்கு கொடுத்துவிட வேண்டும்.

இது குளோப்ளைசேஷன் மூலமாக வந்த புதிய வியாபார உத்தி. அது ஒரு புறம் இருக்கட்டும்.

தொழிலாளர்களுக்காக நடத்தப்படும் இந்த வகுப்பில் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளவும், உடலைப் பேணிப் பாதுகாக்கவும் சில விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பார்கள். அதில் ஒன்று அதி டென்ஷனாகவே வாழும் நாம் மனதை எப்படி அமைதிப்படுத்திக் கொள்வது என்பதற்க்கு ஒரு புதிய முறையைக் கற்றுக் கொடுத்தார்.

இதை அறிமுகப்படுத்தியவர் என்று சொல்லி ஒரு ஆங்கிலேயரின் பெயரைச் கூறினார். மனோவியல் ரீதியாக அவர் கொடுக்கும் இந்தப் பயிற்ச்சி நல்ல பலனைக் கொடுத்தது என்றும் கூறி அதை செய்யச் சொன்னார்.

அவர் சொன்னதாவது:

முதலில் கண்களை மெதுவாக மூடிக்கொள்ளுங்கள்.

உங்கள் வாயால் இப்பொழுது மெதுவாகச் சொல்லுங்கள்…ஆங்கிலத்தில் துவங்கினார்..

மை ஐஸ் ஆர் ரிலாக்ஸ்!

மை நோஸ் ஆர் ரிலாக்ஸ்!

மை மௌத் இஸ் ரெலாக்ஸ்!

மை ஹான்ட்ஸ் ஆர் ரிலாக்ஸ்!

என்று ஒவ்வொரு பாகத்தையும் வாயால் சொல்லி மனதால் ரிலாக்ஸ் படுத்தினார்.

இவற்றை சொல்லி முடித்து விட்டு இப்பொழுது கண்களை மெதுவாக திறங்கள். இப்பொழுது உங்கள் மனதும் உடலும் ரிலாக்ஸாக இருக்கிறதா? என்று எல்லோரிடமும் கேட்டு தெரிந்து கொண்டார்.

பிறகு நிகழ்ச்சி பற்றி எல்லோரிடைய கருதையும் கேட்டார்.

என் முறை வந்தது. நான் சொன்னேன்…”சார் இது என்ன பிரமாதம் இதை நான் குழந்தைப் பருவம் முதலே செய்து கொண்டிருக்கிறேனே!” என்றேன்.

ஆச்சரியத்துடன் பார்த்த அவர் “அது எப்படி? எனக்குத் தெரிந்த வரை இது புதிய மனோவியல் முறை! இதை எப்படி நீங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே செய்ய முடியும்” என்று கேட்டார்.

நான் சொன்னேன் “சார் நீங்க என்னவெல்லாம் சொன்னீர்களோ அது அனைத்தும் நான் சிறு வயது முதலே சொல்லும் கந்தர் சஷ்டி கவசத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. உடலின் ஒரு அவயவம் விடாமல் தியானிக்கும் பயிற்ச்சியை அது ஆன்மீக ரீதியாக மிக அருமையாக கொடுக்கிறது” என்றேன்.

மிகவும் ஆர்வமாக இதைக் கேட்ட அவர் கந்தர் சஷ்டி கவசத்தைச் சொல்லுவதால் ஏற்படும் பயனைப் பற்றி விளக்கமாக சொல்லச் சொன்னார்.

நானும் சொல்லத் துவங்கினேன்.

கந்தர் சஷ்டி கவசம் சொல்லும் போது நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வோரு வேல் காக்குமாறு பிரார்த்திக்கிறோம்.

உதாரணமாக ஒரு சில வரிகளைப் பார்ப்போம்.

கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க!

விதிச்செவி இரண்டும் வேலவர் காக்க!

நாசிகளிரண்டும் நல்வேல் காக்க!

பேசிய வாய் தனைப் பெருவேல் காக்க!

கன்னமிரண்டும் கருனைவேல் காக்க!

என் இளங்கழுத்தை இனியவேல் காக்க! .

என்று இப்படியே உடலில் ஒரு அங்கம் விடாமல் வேல் காக்க என்று கூறுகிறோம்.

இப்படி தினசரி நாம் வாயால் ஒவ்வொரு அவயவங்களைப் பற்றி சொல்லும் போது நமது மனது அந்த அங்கத்தில் நிலை கொள்கிறது. மனது தியானிக்கும் அங்கத்தினை நமது மூளை தானாகவே ஒருசில வினாடிகள் கூர்ந்து கவனிக்கிறது.

இப்படி மூளையின் தனி கவனத்திற்க்கு வரும் போது அந்த பாகத்திற்குரிய மூளையின் செயல்பாடுகள் சிறப்படைகிறது. இப்படி தினசரி மிகவும் அமைதியான மனநிலையில் நாள் இருமுறை நம் உடல் பாகத்தினை மூளையின் கவனத்திற்க்கு கொண்டு வந்தால் உடலின் சிறு சிறு குறைபாடுகளை மூளை தாமாகவே சரி செய்து கொள்ள தூண்டுதலாக அமையும்.

மனோவைத்திய ரீதியாக உடல் நோய்களைப் போக்க முடியும் என்று தற்காலங்களில் நாம் ஆராய்ச்சியாளர்கள் சொல்லி கேட்பதில்லையா. இன்றைக்கு ஆராய்ச்சி என்று சொல்லி வெள்ளைக்காரன் கண்டுபிடித்ததாகச் சொல்லுவதை நம் முன்னோர்கள் ஏற்கனவே கண்டறிந்தது மட்டுமல்லாமல் அவற்றைப் பயன்பாட்டில் செயல்படுத்தியும் வந்திருக்கிறார்கள்.

இந்த மனோவைத்திய முறை நம் வாழ்க்கை முறையாகவும் இருக்கிறது.

கந்தர் சஷ்டியை தினசரி சொல்லும் போது நம் உடல் முழுவதும் மூளை செயல்பாடு அதிகரிப்பதால் இது ஒரு பாதுகாப்பு கவசமாக இருப்பதாலேயே இதை கந்தர் சஷ்டி கவசம் என்று கூறினார்கள்.

இந்த கவசத்தில் வரும் வரிகளில் நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும் என்று ஒரு வரி உண்டு. வார்த்தைகளால் சொல்லும் மந்திரத்தினால் நவகோள்கள் எப்படி நன்மை செய்யும் என்றும் தோன்றலாம். நவ கிரகங்களின் மாறுதல்களால் பூமியின் மீதே பாதிப்பு ஏற்படும் போது மனித உடலில் பாதிப்பு ஏற்படாதா என்ன?

கிரகங்களின் மற்றத்தால் நமது உடலில் ரத்த ஓட்டம் மற்றும் வாத பித்த பாதிப்புகள் ஏற்படுகிறது. உடலில் ஏற்படும் எந்த ஒரு வியாதிக்கும் இவற்றில் ஏற்படும் மாற்றமே அடிப்படை. ஆனால் கவசம் படிப்பதன் மூலமாக தினசரி மூளை நமது உடலை உற்று நோக்கி தானே தன்னைச் சரிசெய்யும் வேலையை செய்து கொண்டே இருப்பதால் நவ கோள்களால் ஏற்ப்படும் உடல் மாறுபாடு கூட பாதிப்பை ஏற்படுத்தாது என்பதே இதன் சாரம். அதையே நவகோள்கள் கூட மகிழ்ந்து நன்மை அளிப்பதாக கூறினார்கள்.

இப்படி கந்தர் சஷ்டி கவசம் தொடர்ந்து படிப்பதில் மனோவியல் ரீதியான நன்மைகள் உள்ளன.

ஆனால் ஆராயாமலே தற்க்காலத்தில் எல்லாவற்றையுமே மூடநம்பிக்கை என்று சொல்லும் பகுத்தறிவு மடையர்களுக்கு இது புரிவது சாத்தியமில்லை. ஏனென்றால் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அடிப்படை அறிவே கூட இருப்பதில்லை என்பதே உண்மை.

ஆகையால் தமிழர் தர்மத்தில் சொல்லப்படும் பல அறிவியல் மற்றும் மனோரீதியான சூட்சுமங்களை புரிந்து கொள்ளும் நீங்கள் தான் உண்மையான பகுத்தறிவாளர்கள். ஆகையால் சொல்கிறேன் இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்”. இவ்வாறு சொன்னவுடன் பயிற்சியாளர் மிகவும் மகிழ்ந்து என்னைப் பாராட்டினார்.

காக்க காக்க கனகவேல் காக்க!
நோக்க நோக்க நொடியில் நோக்க!